ETV Bharat / bharat

மக்களின் எதிர்பார்ப்பு, அரசின் நோக்கம்.. என்ன நடக்கப்போகிறது தாராவியில்!

author img

By

Published : Jul 17, 2023, 10:19 PM IST

Updated : Jul 18, 2023, 10:51 PM IST

mumbai dharavi special
mumbai dharavi special

தாராவி மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஆணையை மஹாராஷ்டிரா மாநில அரசாங்கம் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள நிலையில் விரைவில் அதன் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பைக் காணலாம்.

மக்களின் எதிர்பார்ப்பு, அரசின் நோக்கம்.. என்ன நடக்கப்போகிறது தாராவியில்!

மும்பை: தாராவி... இந்த பெயரை கேள்விப்படாத தமிழர்கள் இருக்க முடியாது.. கமல்ஹாசனின் நாயகனில் தொடங்கி, சூப்பர் ஸ்டாரின் காலா, யங் சூப்பர்ஸ்டார் எஸ்டிஆரின் வெந்து தணிந்தது காடு வரையிலும் இந்த பகுதியைத் தழுவியே கதைக்களங்கள் திரையில் படமாக்கப்பட்டன. இந்தப் பகுதிக்கு எப்படி தமிழர்கள் வந்தார்கள் என்ற கதை நூற்றாண்டு தொடர்புடையது.

தொழில் இல்லாத நாட்களில் பிழைப்புக்காக தமிழ்நாட்டிலிருந்து பரவிய மக்கள் நாடு முழுவதும் குழுக்களாக வசித்து வருகின்றனர். தாராவிக்கும் அப்படிப்பட்ட ஒரு பஞ்சகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குடியேற்றம் நிகழ்ந்தது.

எங்கு திரும்பினாலும், விண்ணை முட்டும் கட்டடங்கள், சர்வதேச நிறுவனங்களின் கிளைகள் என ஒரு வணிகத் தலைநகருக்கு தேவையான அத்தனை அம்சங்களோடு, இந்தி திரையுலகின் தலைநகராகவும் இருக்கும் மும்பையில், இதற்கு சற்றும் தொடர்பில்லாத ஏழ்மையை பறைசாற்றும் இடமாக உள்ளது, தாராவி. பத்துக்கு பத்து அறைகளில் ஏழெட்டுபேர் தங்குவது இங்கு மிகச்சாதாரணம். ஆனால், இந்த ஏழ்மை தான் எங்களின் வாழ்வாதாரம் எனக் கூறுகின்றனர், தாராவிவாசிகள். இங்கு கிடைப்பதைப் போன்ற தொழில் வாய்ப்புகள் வேறெங்கும் இவர்களுக்கு வாய்க்க வழியில்லை. இந்த ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியை, சீரமைக்கும் திட்டத்தில் தற்போது புதிய முனைப்பு ஏற்பட்டுள்ளது.

எந்த அரசு வந்தாலும் தாராவி அவர்களுக்கு நகருக்கு திருஷ்டி பொட்டாக தெரிகிறதோ என்னவோ, இதனை சீரமைக்கத் தான் முயற்சி செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாராவி குடிசை மாற்று வாரியத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் திட்டம் ஏலத்தின் வாயிலாக அதானி குழுமத்திற்கு கிடைக்கப்பெற்றது. அதனைத்தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களால் இந்த திட்டம் கிடப்பில்போடப்பட்ட நிலையில் தற்போது அதற்கான ஆணையை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது, மஹாராஷ்டிரா அரசாங்கம்.

2.8 சதுர கிலோமீட்டர் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கியிருக்கும் தாராவியை மக்கள் 'மினி இந்தியா' என அழைக்கும் நிலையில் இங்கு, மண்பாண்டங்கள் முதல் தோல் பொருட்கள் வரை பல தொழில்களின் முக்கியப் பகுதியாக இருக்கிறது.

தாராவியை சீரமைப்பதெல்லாம் சரி, எங்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு பணிகளை மேற்கொள்ளுங்கள் என்கிறார், பல்லாண்டுகளாக அங்கு வசித்து வரும் பட்டாசுக்கடை உரிமையாளரான தமிழர் செல்வகுமார் நாடார். அவர் பேசுகையில், ''தாராவியில் உள்ள சுமார் அரை ஏக்கர் நிலத்தில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வார்கள்? அரசு அவர்களுக்கு வசிக்க இடம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்.

தோல் பொருள் கடை உரிமையாளர் தீபக் காலே பேசுகையில், ''மக்களை கூண்டோடு வேறு இடத்திற்கு மாற்றினால் பெரும் பிரச்னை ஏற்படும்'' என்றார்.

மேலும், "தாராவி மறு சீரமைப்புப் பணிகளை அதானி எப்படி திட்டமிடுகிறார் என்பதை நாங்கள் அறிய வேண்டும். மேலும் பல கட்டங்களாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த மக்களையும் மாற்றி அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் நானும் அதை எதிர்ப்பேன்" என்கிறார் அழுத்தமாக.

மேலும் இது குறித்து பேசியுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினரும் தமிழருமான தமிழ்ச்செல்வன், 7 கட்டங்களாக தாராவி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம் என்கிறார். மக்களைக் கூண்டோடு வெளியேற்றும் திட்டம் அரசிடம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெருநகரங்களின் அழகும், வளர்ச்சியும் முக்கியம்தான் என்றாலும், அங்கு வசிக்கும் மக்கள், அவர்களின் வாழ்வாதாரம், போன்றவற்றையும் கருத்தில் கொண்டு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியையும் அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்பது தாராவி மக்களின் கோரிக்கை. சுகாதாரமான வாழ்விடம் தாராவியின் முக்கிய பிரச்னையாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது அரசு. இரு தரப்புக்கும் சுமூகமான தீர்வை எதிர்நோக்கி தாராவியும் காத்திருக்கிறது.

இதையும் படிங்க: பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்பு - ஜே.பி. நட்டா!

Last Updated :Jul 18, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.