புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் சட்டசபை மைய மண்டபத்தில் இன்று (பிப்.23) கூடியது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த பரசுராமன், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தைப் பேரவைத் தலைவர் சபாநாயகர் வாசித்தார். அப்போது, குறுக்கிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, பாஜக, காங்கிரஸ் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 8 மாதம் ஆகிறது. அறிவித்த எந்த ஒரு திட்டங்களையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது என்ன நிலையில் உள்ளது. அறிவித்தது போன்று விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யவில்லை, பொங்கல் தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருள்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு 10,000 அரசு அறிவித்தது போல் இதுவரை வழங்கவில்லை என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி முதலமைச்சர் பதிலளிக்காததைக் கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.