ETV Bharat / bharat

அயோத்தி ராமர் பாதங்களை அலங்கரிக்க வெள்ளி கொலுசு தயாரிக்கும் ஆக்ரா முஸ்லீம்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 1:45 PM IST

அயோத்தி ராமர் பாதங்களை அலங்கரிக்க வெள்ளி கொலுசு தயாரிக்கும் ஆக்ரா முஸ்லீம்கள்
அயோத்தி ராமர் பாதங்களை அலங்கரிக்க வெள்ளி கொலுசு தயாரிக்கும் ஆக்ரா முஸ்லீம்கள்

Anklets for Lord Ram Seeta: அயோத்தி ராமர் மற்றும் சீதையின் பாதங்களை அலங்கரிக்க மயில் வடிவமைப்பு கொண்ட வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணியில் ஆக்ராவின் முஸ்லீம் பொற்கொல்லர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று அடுக்குகளாக நாகரா கட்டிடக்கலை நுட்பத்தில், சுமார் 161 அடி உயரத்தில் இந்த கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மூலம் கட்டப்பட்டு வரும், இந்த கோயிலின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் ஜன.22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய பொன் சந்தையான ஆக்ராவில், முஸ்லீம் கைவினை கலைஞர்களால் இராமர் மற்றும் சீதையின் பாதங்களை அலங்கரிக்கும் வெள்ளி கொலுசு தயாரிக்கப்பட்டு வருகிறது.

மயூர் பயல் (Mayur Payal) எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்த வெள்ளி கொலுசுகள், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், மயில் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் 551 கிராம் எடையுள்ள இந்த கொலுசுகளை ஆக்ராவின் பொற்கொல்லர்களான மோனு பிரஜாபதி மற்றும் பாசில் அலி ஆகியோர் தயாரித்து வருகின்றனர். 40 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கொலுசுகள், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக அயோத்தியை சென்றடையும்.

மேலும் ராமரின் தாய் வீடான சத்தீஸ்கரில் இருந்து 3 ஆயிரம் குவிண்டால் அரிசி, சீதையின் தாய் வீடான நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இருந்து ஆடைகள், பழங்கள், பரிசுகள், உலர் பழங்கள், உத்தர பிரதேச மாநிலம் எட்டாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ மணிகள், குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீள ஊதுபத்திகள் போன்றவை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக, அயோத்திக்கு கொண்டு செல்லப்படும்.

ஆக்ரா பொன் சங்கத்தின் தலைவர் நித்தோஷ் அகர்வால், “500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பிரமாண்ட கோயிலில் சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவார். இந்த வரலாற்று நிகழ்விற்காக, 551 கிராம் எடை மற்றும் ஆறு அங்குல கொலுசுகளை கைவினை கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

ராமர் மற்றும் சீதைக்கான கொலுசுகளை தயாரித்து வரும் மோனு பிரஜாபதி, சீதைக்கு கொலுசு தயாரிக்கும் பாக்கியத்தை கேட்டதும், சிலிர்த்து விட்டேன். இந்த ஒருநாளுக்காக 22 வருடங்கள் உழைத்ததாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார். இந்து கோயில் விழாவிற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் முன்னர் இஸ்லாமியரின் பாபர் மசூதி இருந்ததும், அதை இடித்துவிட்டு தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.