ETV Bharat / bharat

மணிப்பூர் சம்பவம்: குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைப்பு - பிரதமர், முதலமைச்சர் உருவபொம்மை எரிப்பு!

author img

By

Published : Jul 21, 2023, 6:38 PM IST

மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியின் வீட்டை அவரது கிராமத்தைச் சேர்ந்த பெண்களே தீ வைத்து கொளுத்தினர்.

Manipur parading case
மணிப்பூர்

மணிப்பூர்: மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தீஸ் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பழங்குடியின மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு எதிராக மெய்தீஸ் சமூகத்தினரும் போராட்டதில் இறங்கியதால், மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. சுமார் மூன்று மாதங்களாக அங்கு இனக்கலவரம் நடந்து வருகிறது.

இதனிடையே, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் கலவரக்காரர்கள் இரண்டு குக்கி சமூக பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த மே 4ஆம் தேதி நடந்த நிலையில், சுமார் 75 நாட்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். காங்போக்பி, தவுபால் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தில் கைதான மெய்தீஸ் சமூகத்தைச் சேர்ந்த குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. தவுபால் மாவட்டத்தில் யெய்ரிபோக் கிராமத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டை, அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த மெய்தீஸ் சமூக பெண்கள் அடித்து நொறுக்கினர். அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தீ வைத்து கொளுத்தினர்.

ஒருபுறம் பொதுமக்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் அம்மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தவறியதற்காகவும், பெண்களை பாதுகாக்க தவறியதற்காகவும் பொறுப்பேற்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், மோடி, அமித்ஷா மற்றும் பிரேன் சிங்கின் உருவ பொம்மைகளையும் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும், பாஜக அரசு மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவரத் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.