ETV Bharat / bharat

லண்டனில் இந்திய தேசியக் கொடி அகற்றம் - மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்!

author img

By

Published : Mar 20, 2023, 9:27 AM IST

Etv Bharat
Etv Bharat

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் அம்ரித் பாலுக்கு ஆதராவாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு பறந்து கொண்டு இருந்த இந்திய தேசியக் கொடியை அகற்றினர்.

டெல்லி: லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் பறந்த தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். அவரது அமைப்பைச் சேர்ந்த லவ் பிரீத் என்பவரை கடந்த மாதம் கடத்தல் வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும் லவ் பிரீத்தை விடுதலை செய்யக் கோரியும் அம்ரித் பால் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள், போலீசாருடன் மல்லுக்கட்டினர். இதில் போலீசார் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அப்போதைய நிலையை சரிசெய்யும் பொருட்டு லவ் பிரித்தை போலீசார் விடுவித்தனர். தொடர்ந்து அம்ரித் பால் சிங் மீது அதிக கவனம் செலுத்திய போலீசார், அவரது நடவடிக்கைகளை கவனித்து அம்ரித்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த வாரம் அம்ரித்தை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஞ்சாப்பில் வன்முறையை தூண்டும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க 144 தடை உத்தரவை பிறப்பித்த போலீசார், இணையதள சேவையை முடக்கினர்.

இந்நிலையில், அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவில் காலிஸ்தான் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பெருவாரியான வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்புக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால் அங்குள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்,. காலிஸ்தான் ஜிந்தாபாத் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பிய அவர்கள் தூதரகத்தின் பறந்து கொண்டு இருந்த தேசியக் கொடியை அகற்றினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், இந்திய தூதரகம் முன் பறந்து கொண்டு இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள் முற்றுகையின் போது அங்கிருந்த பாதுகாவலர்கள் எங்கே சென்றனர், பாதுகாப்பு குளறுபடிகள் ஏன் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் இது குறித்து நிலைமையை கேட்டறிய இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடி அகற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் நாளை வரை இணைய சேவை முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.