ETV Bharat / bharat

“மோடியும் அமித்ஷாவும் ஜனநாயகத்தின் குரலை நெரிக்கிறார்கள்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 4:42 PM IST

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

India Alliance Protest: நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு பேர், வண்ண புகை குண்டை வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பந்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த 146 எம்பிக்கள் இடைக்கால தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைக்கால தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சுதேசி பஞ்சாலை அருகே இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மோடியின் ஆட்சியில் ஜனநாயக படுகொலை நடந்து வருகிறது. நரேந்திர மோடி அரசு 146 எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றமும், எம்பிக்களும் பாதுகாக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்திற்கு ஏழடுக்கு பாதுகாப்பு என்று கூறினார்கள். ஆனால், சர்வ சாதாரணமாக இரண்டு பேர் உள்ளே புகுந்து இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தீவிரவாதிகளாக இருந்திருந்தால், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

இந்த சம்பவத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல், ஜனநாயக படுகொலை செய்து, இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது.

மத்தியில் இருக்கின்ற நரேந்திர மோடி ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். மோடியும் அமித்ஷாவும் ஜனநாயகத்தின் குரலை நெரிக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த இந்தியா கூட்டணி கட்சியால்தான் முடியும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.