வாரணாசி ஞானவாபி மசூதியில் மீண்டும் கள ஆய்வு தொடக்கம்...பலத்த போலீஸ் பாதுகாப்பு...!

author img

By

Published : May 14, 2022, 2:22 PM IST

Gyanvapi

வாரணாசி ஞானவாபி மசூதியில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் கள ஆய்வை தொடங்கியுள்ளது. வீடியோ பதிவுடன் ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிங்கார கெளரி அம்மனுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிங்கார கெளரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், இந்து, முஸ்லீம் வழக்கறிஞர்கள் அடங்கிய நீதிமன்றக் குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில், வழக்கின் அனைத்து தரப்பிலிருந்தும் பலர் மேற்பார்வையாளர்களாக இடம்பெற அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி மசூதி வளாகத்தில் கள ஆய்வு தொடங்கியது. பின்னர், மசூதிக்கு உள்ளேயும் கள ஆய்வு நடத்துவதற்காக நீதிமன்றக் குழுவினர் சென்றபோது, இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றக்குழு திரும்பி சென்றது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கள ஆய்வை 17ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (மே13) விசாரணைக்கு வந்தபோது, கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதேநேரம் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மசூதி நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்றது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நீதிமன்றக்குழு ஞானவாபி மசூதியில் இன்று (மே14) மீண்டும் கள ஆய்வை தொடங்கியுள்ளது. வீடியோ பதிவுடன் காலை எட்டு மணி முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வரும் 16ஆம் தேதி நிறைவடைந்து, 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற நீதிமன்ற குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.