ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற நீதிமன்ற குழு!

author img

By

Published : May 8, 2022, 2:55 PM IST

Mosque

ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் உள்ள இந்து தெய்வங்களுக்கு தினந்தோறும் வழிபாடு செய்ய அனுமதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற குழு மசூதி வளாகத்தில் கள ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், மசூதிக்குள்ளே கள ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் அதன் இருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிங்கார கெளரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிங்கார கெளரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், இந்து, முஸ்லீம் வழக்கறிஞர்கள் அடங்கிய நீதிமன்றக் குழுவை அமைத்தது. இந்த குழுவில், வழக்கின் அனைத்து தரப்பிலிருந்தும் பலர் மேற்பார்வையாளர்களாக இடம்பெற அனுமதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (மே6) மசூதி வளாகத்தில் கள ஆய்வு தொடங்கியது. பின்னர், மசூதிக்கு உள்ளேயும் கள ஆய்வு நடத்துவதற்காக நீதிமன்றக் குழுவினர் நேற்று (மே7) சென்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மசூதிக்குள் வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கள ஆய்வை கைவிட்டு நீதிமன்றக் குழுவினர் திரும்பிச் சென்றனர்.

இந்த வழக்கு நாளை (திங்கள்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே நீதிமன்ற குழுவுக்கு தலைமை தாங்கும் அஜய்குமார் மிஸ்ரா பாரபட்சமாக செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரி, மசூதி தரப்பில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் களைகட்டிய மாரியம்மன் திருவிழா; கரகம், தவில், ஓயிலாட்டம், அலகு குத்தல் என பக்தர்கள் பரவசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.