ETV Bharat / bharat

யாசின் மாலிக் நேரில் ஆஜரான விவகாரம்: 4 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

author img

By

Published : Jul 22, 2023, 7:50 PM IST

Etv Bharat
Etv Bharat

திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக் (Yasin Malik) உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானது தொடர்பாக 4 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி: கடந்த 1990ஆம் ஆண்டு நான்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் 1989ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சயீதின் மகள் ரூபயாவை கடத்தியது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதற்கு 2022, செப்டம்பரின் டாடா (TADA) நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதிலும், இவர் மிக முக்கியமான பிரிவினைவாத தலைவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், அவரை வெளியில் அழைத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், வழக்கு விசாரணை தொடர்பாக யாசின் மாலிக் தேவை இருப்பின், அவர் கானொலி வாயிலாக மட்டுமே ஆஜராக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 21) சிறைத்துறையின் வாகனத்தில் யாசின் மாலிக் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபான்கர் துத்தா அடங்கிய அமர்வின் முன்பு ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இது மிகவும் கடினமான சூழ்நிலை. யாசின் மாலிக் நேரில் ஆஜராக வேண்டாம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பின்பற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சக செயலரை தொடர்பு கொண்ட துஷார் மேத்தா, யாசின் மாலிக் மற்ற கைதிகளைப் போன்று அல்ல என்றும், இது தொடர்பாக தகுந்த நடவடிக்கையை’’ எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், திகார் சிறை தரப்பில் இருந்து சிறையின் துணை கண்காணிப்பாளர், இரண்டு உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஒரு தலைமை வார்டன் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிறைத்துறை இயக்குநர் சஞ்சய் பானிவால் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில், துணை ஜெனரல் ஆய்வாளர் (சிறைச்சாலை தலைமையகம்) ராஜீவ் சிங் விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.