ETV Bharat / bharat

மணிப்பூர் மாநிலம் முழுவதும் உணவு, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:42 PM IST

ensure-supply-of-food-medicines-do-airdropping-of-supplies-supreme-court-on-manipur-violence
மணிப்பூர் மாநிலம் முழுவதும் உணவு, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Ensure Supply of Food and Medicines in Manipur: மணிப்பூர் மாநிலம் முழுவதும் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சீராக கிடைப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: மணிப்பூரில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதி ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் விமானம் மூலம் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் எனவும், மோரே பகுதியில் உணவு இல்லாமல் பொதுமக்கள் உள்ளனர். தடுப்புகள் அகற்ற ஆயுத படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை விமான போக்குவரத்து மூலமாக கொண்டு செல்வது முக்கியமானது என தெரிவித்தார்.

நீதிமன்றம் நியமித்த குழுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, சில முகாம்களில் அம்மை நோய் மற்றும் சிக்கன் குனியா காய்ச்சல் பரவி வருவதாகவும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் இருப்பதால் அவர்களுக்கான மருந்து கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இதனை மத்திய, மாநில அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள் கூறும் போது, உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவை குறித்து அறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவில், உணவு மருத்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தடுப்புகளை அகற்றாத பட்சத்தில் மத்திய, மாநில அரசுகள் விமான போக்குவரத்து மூலம் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்த வழக்கு குறித்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.