ETV Bharat / bharat

விண்ணை முட்டும் விமான டிக்கெட் விலையேற்றம்..! இந்தியா - கனடா பதற்றம் காரணமா..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 6:23 PM IST

nervous situation between India and Canada flight ticket prices are skyrocketing
இந்தியா - கனடா விமான டிக்கெட் விலை

Canada flight ticket price Hike: கனடா செல்வதற்கான விமான டிக்கெட் விலை உச்சத்தை தொட்டு இருப்பதற்கு இந்தியா - கனடா இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஹைதராபாத்: கனடாவின் கல்வியாண்டு தொடக்கத்தில் விமான டிக்கெட் விலையேற்றத்துடன் காணப்படும், ஆனால் தற்போது கல்வி ஆண்டு தொடங்கிய பின்னரும் விமான டிக்கெட் விலை குறையாமல் உச்சத்திலேயே காணப்படுவதாக டிராவல் ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் இருந்து கனடாவின் எந்த நகரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் விமான டிக்கெட் விலை அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமான விமான கட்டணத்தை விட தற்போது நூறு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா - கனடா இடையே நிலவும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இந்த விமான டிக்கெட்டுகளின் விலை அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுவாக செப்டம்பர் கடைசி வாரத்தில் கனடாவின் பல்வேறு நகரங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கும். அதற்கு முன்னதாக மாணவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்பதால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து காணப்படும். சாதாரண நாள்களில் ஹைதராபாத்தில் இருந்து துபாய் வழியாக கனடாவுக்குச் செல்வதற்கான டிக்கெட்டின் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை இருக்கும்.

அதுவே, கல்வியாண்டின் தொடக்கத்தில் இதன் விலை ரூ.1.10 லட்சம் வரை இருக்கும். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிக்கெட் விலை மீண்டும் குறைந்து விடும். ஆனால், தற்போது நிலை அப்படி இல்லை என ஹைதராபாத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட்கள் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் தெரிவித்தனர். தற்போது, ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை உள்ளதாகவும், இதே போல் பதற்றமான சூழல் நிலையினால் டிக்கெட் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து டிராவல் ஏஜென்சி தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு கல்விப் பருவத்திலும், தெலுங்கு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர்கல்விக்காக கனடா செல்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் அந்நாட்டில் உள்ள டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் ஒட்டாவா நகரங்களுக்கு செல்கின்றனர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்களில் இருந்து மருந்து, மிஷனரி, முத்து மற்றும் நகை வியாபாரிகள் வர்த்தக ரீதியாக கனடாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். வழக்கமாக கல்வியாண்டின் தொடக்கத்தில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும், பின்னர் நிலைமை சகஜமாகி விடும்.

ஆனால் இம்முறை விலை கடுமையாக அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றனாம சூழ்நிலையில் விமான டிக்கெட் விலையும் அதிகரித்து உள்ளதால் கல்விக்காக செல்லும் மாணவர்களும், வணிகர்களும், பணிக்குச் செல்லும் நபர்களும் கனடா செல்லமுடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு..! போராட்டத்தில் குதித்த கன்னட அமைப்புகள்! பந்த் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.