ETV Bharat / bharat

கேரளாவில் ஆளுநர் மாளிகை முற்றுகை - பங்கேற்ற திருச்சி சிவா

author img

By

Published : Nov 15, 2022, 11:05 PM IST

Etv Bharat
Etv Bharat

கேரளா ஆளுநருக்கு எதிராக, அம்மாநிலத்தில் ஆளும் சிபிஎம் கட்சியினர் நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அதில் திருச்சி சிவா எம்.பி.யும் பங்கேற்றார்.

திருவனந்தபுரம்(கேரளா): உயர் கல்வியின் வளர்ச்சியை முடக்கியதாக, ஆளுநரின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியினர் இன்று (நவ.15) 'உயர்கல்வி பாதுகாப்புக் குழு' என்ற பதாகைகளுடன் அம்மாநில ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் திமுகவின் சார்பில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, 'கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்காக ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறார். இதை அவருக்கு நினைவூட்டுகிறேன். எந்த விலையிலும், அத்தகைய நகர்வுகளை எதிர்ப்போம். சங் பரிவாரத்தின் 'இந்து ராஷ்டிரா' சித்தாந்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதை கேரளா அரசு எதிர்க்கும்' என்று கூறினார்.

ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படும் கேரளா ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து வருகிறார். கேரளாவில் மட்டுமல்ல, பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஆளுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர்கள் பாஜகவின் வழிகாட்டுதலின்படி, செயல்படுவதோடு அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு அனுப்பிய மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள உயர்தரமான உயர் கல்வி முறையை அழிக்கவே, ஆளுநரின் முயற்சிகள் உள்ளன. அதற்காக அரசியலமைப்பு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார். மேலும், நாட்டில் இந்து மதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே சங்கபரிவார் எண்ணம், அதற்காக பல்கலைகழகங்களுக்குள் பதுங்கி இருக்க முயல்வதோடு, மத்திய பல்கலைக்கழகங்களில் அதனை செய்கிறார்கள். ஆனால், கேரளாவில் செய்ய முடியாது. கேரளா அனைவரையும் மனிதர்களாகவே பார்க்கிறது. சாதி, மத அடிப்படையில் மக்களை வேறுபடுத்துவதில்லை. இந்த 'இந்துத்துவா' குறித்த நோக்கங்கள் அழிக்கப்பட வேண்டும், அதற்கான போராட்டம் தொடரும்' என்றார் யெச்சூரி.

இதையடுத்து மேடையில் பேசிய எம்.பி. திருச்சி சிவா, ' 'இந்துத்துவா' கொள்கையினை இந்தியா முழுக்க பரப்ப முயல்கின்றனர். அதனால் தான், அதனை தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் எதிர்க்கின்றனர். தற்போது, கேரளாவிலும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்; அதை முறியடிக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அண்மையில் கடிதம் எழுதிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை ஆளுநருக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எல்.டி.எஃப் போராட்டத்தில் பங்கேற்க அனுப்பி வைத்தாக அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் ஆளுநர் மாளிகை முற்றுகை..பங்கேற்ற திருச்சி சிவா எம்பி

மேலும் இதுகுறித்து, ’ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஒரு ஆரம்பமே. வரும் நாட்களில் ஆளுநருக்கு எதிரான போராட்டம் தொடரும்’ என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் - அமைதியின் தூதுவர்களா? அல்லது செய்தி மட்டும் சொல்பவர்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.