ETV Bharat / bharat

பத்திரிகையாளர்கள் - அமைதியின் தூதுவர்களா? அல்லது செய்தி மட்டும் சொல்பவர்களா?

author img

By

Published : Nov 15, 2022, 8:07 PM IST

Updated : Nov 15, 2022, 8:37 PM IST

பத்திரிகை துறையின் செயல்பாடுகள் குறித்து மில்லியன் டாலர் கேள்வி இருந்தாலும், அதற்கு பதில் மிக எளியதுதான். பத்திரிக்கையாளர்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் செய்திகளை வெளியிட வேண்டும், கள எதார்த்தத்தையும், உண்மைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிறார் ஈடிவி பாரத்தின் குழும ஆசிரியர் பிலால் அகமது பாட்.

Journalists
Journalists

ஹைதராபாத்: பத்திரிகை துறையில் மொழி என்பது செய்திகளை கடத்தும் ஒரு முக்கியமான கருவி. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இத்தகைய தகவல் பறிமாற்றத்திற்கு உதவுகின்றன. இந்த மொழிகளை குறிப்பிட்ட மதத்தின் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்தால், அது செய்திகளின் உண்மைத்தன்மையை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துகிறது. மொழிக்கு சிவப்பு, பச்சை அல்லது காவி நிறம் பூசப்பட்டால், செய்தியின் நம்பகத்தன்மை சிதைந்துவிடும். செய்தியின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் தாக்கமும் இருக்கும். செய்திகள் அதிகளவு மக்களை சென்றடைவதற்கு அதன் நம்பகத்தன்மைதான் உத்திரவாதம் அளிக்கிறது.

கடந்த 13ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தில், உருது பத்திரிகை உலகின் 200 ஆண்டு கால வரலாற்றைப் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நாட்டில் உள்ள பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்தும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். டெல்லியிலிருந்து சஞ்சய் கபூர், ஸ்ரீனிவாசன் ஜெயின், சதீஷ் ஜேக்கப், ராகுல் தேவ், பங்கஜ் பச்சூரி, சுமேரா கான், ராகுல் ஸ்ரீவஸ்தவா, ஆனந்த் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலைகழகத்தில் உள்ள பத்திரிகை துறை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில், இந்தியாவில் உருது பத்திரிகைகள் காலூன்றி 200 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதனை ஒரு மதத்தின் பரிமாணத்தில் பார்க்கக்கூடாது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெரும்பாலான பத்திரிகையாளர்கள் உருது அல்லாத பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்கள், உருது பத்திரிகைகளையும், பிற மொழிகளில் உள்ள பத்திரிகைகளைப் போலவே பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

உருது என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமான மொழி அல்ல, அது அனைவருக்குமான மொழி என்பது அழுத்தமாக கூறினர். பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் உருது மொழிப் பத்திரிகை தொடங்கியவர் ஒரு இந்து என்பதை மேற்கோள் காட்டிய பத்திரிகையாளர்கள், அதனை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினர். உருது பத்திரிகைகளின் எதிர்காலம், சவால்கள் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவை குறித்து பத்திரிகையாளர்கள் பேசினர். உருது பத்திரிகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிய முன்னாள் பாஜக எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா, உள்ளடக்கத்தை விட மொழியே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

விழாவில் பேசிய என்டிடிவியின் ஸ்ரீனிவாசன் ஜெயின், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மக்களிடையே விவாதத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது குறித்து பேசினார். ஊடகங்களால் அமைதியை நிலைநிறுத்த முடியாது என்றும், மக்களுடன் தொடர்பு கொள்வதுதான் ஊடகங்களின் வேலை என்றும், எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் உண்மையை கொண்டு சேர்ப்பதுதான் ஊடகங்களின் கடமை என்றும் தெரிவித்தார். ஜெயினின் பேச்சுக்கு அரங்கத்தில் உற்சாகத்துடன் கரவொலிகள் எழுந்தன.

பின்னர் பேசிய இந்தி பத்திரிகையாளர் ஒருவர், உக்ரேனிய பெண்களின் நிலை குறித்து பெரியளவில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என்றும், இது ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த டிவி9 பத்திரிகையாளர் சுமேரா கான், உக்ரேனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பல்வேறு செய்திகளை தான் தனிப்பட்ட முறையில் தயாரித்து வெளியிட்டதாக கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பத்திரிகையாளர் பங்கஜ் பச்சூரி, எது எப்படி இருந்தாலும், இறுதியில் செய்தியாளர்கள் வெறுமனே பிரச்சினைகளை மட்டும் பேசிவிட்டு போகிறார்களா? அல்லது நாட்டில் அமைதி நிலவுதற்காக பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறார்களா? என்பதுதான் விவாதத்துக்குரிய பொருள் என்றார்.

பத்திரிகையாளர்களின் இந்த கருத்துகள் மாணவர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. பத்திரிகை துறையின் அடிப்படைகள் மீதான கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு பத்திரிகை துறை மாணவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பத்திரிகையாளர், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியும்போது, அமைதியை ஊக்குவிப்பது நோக்கமாக இருக்கலாம். ஆனால், கள எதார்த்தத்தை வெளிக்கொண்டுவருவதுதான் பத்திகையாளரின் வேலை. உண்மை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி அதை வெளியிட வேண்டும். பணியில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.

இதையும் படிங்க:உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர் மோடி

Last Updated :Nov 15, 2022, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.