ETV Bharat / bharat

"பதற்றமான வாக்குச்சாவடிகளின் விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் வழங்கவில்லை" - BSF குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 9, 2023, 3:25 PM IST

sensitive
மேற்குவங்கம்

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலின்போது, பதற்றமான வாக்குச்சாவடிகளின் விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்றும், அதனால் பாதுகாப்புப் படையினரை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் நேற்று (ஜூலை 8) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 73,887 உள்ளாட்சி இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன. இதனால், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு இருந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்தியப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.

நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக கூச்பெஹர், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் நடந்தது. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கத்தி, துப்பாக்கி, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கிக் கொண்டனர். சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்தனர், வாக்குச்சாவடிகளை சூறையாடினர். மேற்குவங்க மாநிலம் நேற்று கலவர பூமியாக காணப்பட்டடது. இந்த கலவரங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் உள்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 13 பேர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ், பாதுகாப்புக்கு மத்திய படைகள் வேண்டுமென எதிர்கட்சிகள்தான் கோரியதாகவும், ஆனால் வன்முறை சம்பவங்கள் நடக்கும்போது மத்தியப் படைகளை காணவில்லை என்றும் தெரிவித்தது. மத்தியப் படைகள் சரியான இடங்களில் நிறுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளின் விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை என எல்லைப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி எஸ்எஸ்.குலேரியா கூறும்போது, "பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலைத் தரும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால், கடந்த 7ஆம் தேதி ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு ஒரே ஒரு கடிதம் கிடைத்தது. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்த வாக்குச்சாவடிகளின் இருப்பிடம் உள்ளிட்ட பிற தகவல்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. அதனால், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் படைகளை பணியமர்த்த முடியவில்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டனர்" என்றார்.

இதையும் படிங்க: காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் - ரயில்வே அமைச்சர் கூறிய விளக்கம்...?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.