டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்திய தண்டனை சட்டப்பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை)-ல், திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மனைவி 18 வயதுக்கும் மேற்பட்டவர் என்றால், மனைவியின் விருப்பமின்றி கணவர் பாலியல் தொந்தரவு செய்தால், அது வன்கொடுமையாகாது என கூறப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கு, கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் திருமணமான பெண்களுக்கு எதிராக உள்ளது. மணமான பெண்களுக்கு பாரபட்சம் காட்டும் வகையிலும், உரிமை மீறும் வகையிலும் இருப்பதால், அந்த விதிவிலக்கை நீக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் ஹரிசங்கர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளின் கருத்துகளும் முரண்பாடாக இருந்தன. மனைவியின் அனுமதியின்றி கணவர் பாலியல் உறவுகளுக்கு வற்புறுத்தினால் அது குற்றம் என்றும், சட்டப்பிரிவு 375-ல் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ராஜீவ் ஷக்தேர் கூறினார்.
இந்த கருத்தை ஏற்க முடியவில்லை என நீதிபதி ஹரிசங்கர் தெரிவித்தார். இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மும்பை, டெல்லியை தொடர்ந்து கொல்கத்தாவில் ரெய்டு!