ETV Bharat / bharat

ராகுல் யாத்திரையில் மீண்டும் பாதுகாப்பு குளறுபடி.. பாதுகாவலர்கள் திரும்பப்பெறப்பட்டதாக புகார்

author img

By

Published : Jan 27, 2023, 5:24 PM IST

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடைசியாக பஞ்சாப்பில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜம்மு காஷ்மீரின் லக்கன்பூருக்குச் சென்றார்.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, அடுத்த வாரம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து தன் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவுக்குக் கொண்டு வரத் திட்டமிடுள்ளார். பதற்றம் நிறைந்த பகுதியான காஷ்மீரில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க ராகுல் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பனிஹல் பகுதியில் ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் யாத்திரையில் மீண்டும் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து பாதயாத்திரை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியுடன் வந்த பாதுகாப்பு வீரர்கள், திடீரென திரும்ப அரசால் திரும்பப் பெறப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ராகுல் காந்திக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகவும், பாதுகாப்பு குறைபாடு காஷ்மீர் நிர்வாகத்தின் நியாயமற்ற மற்றும் ஆயத்தம் இல்லாத அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜனி பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டபோது ராகுல் காந்தியுடன் இருக்கும் பாதுகாவலர்கள் உடன் இல்லை என்றும், அவர் பயணம் மேற்கொண்ட பாதையில் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்ததாகவும், ஆனால் அந்த கூட்டத்தை பாதுகாவலர்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் பதற்றம் நிலவும் காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வீரர்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் பனிஹல் பகுதியில் கடும் பாதுகாப்பு குளறுபடிகள் நடைபெற்றதாகவும், முன்னறிவிப்பு இல்லாமல் பாதுகாப்பு வீரர்களை பின்வாங்க உத்தரவிட்டது யார் என கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு குளறுபடிக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முழு பொறுப்பு எடுத்துக்கொண்டு பதில் கூற வேண்டும் என்றும்; வருங்காலத்தில் இது போன்ற பாதுகாப்பு விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி திடீரென புல்லட் புரூப் காரில் ஏற்றப்பட்டார். இதனால் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் குழப்பத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: அமிர்தசரஸில் 400 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.