ETV Bharat / bharat

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம்; பிரதமரைச் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 8:01 AM IST

கட்சி எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் பிரதமரை சந்திப்பதாக ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மறுப்பு.

Puducherry: "புதுச்சேரி மாநில அந்தஸ்துகாக அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பேன்" என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இது புதுச்சேரி ஆளும் கட்சி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டக் குழுவினர் தலைவர் நேரு தலைமையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பினர். மேலும், பல கட்ட போராட்டங்களை நடத்தி மத்திய அரசிடம் சென்று வலியுறுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் 516 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு!

இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் பேசியதாவது, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுத்துள்ளது. மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை. அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம்.

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன். மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆளுங்கட்சியை குறை சொல்லும் காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சிக் காலத்தில் மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம்.

நானும் அப்பொழுது காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தேன். அரசியலுக்காக மாநில அந்தஸ்து வழங்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

மேலும், எனக்காக மட்டும் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. மாநில வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு பணியாற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன். மாநில அந்தஸ்து கிடைத்தால் விரைவாக திட்டத்தை செயல்படுத்தக் கூடிய நிலை ஏற்படும். தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட விபத்து..! பஞ்சாபில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.