ETV Bharat / bharat

நிலுவைத் தொகையை செலுத்த 10 ஆண்டுகள் காலக்கெடு; தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிம்மதி

author img

By

Published : Sep 1, 2020, 4:21 PM IST

Supreme court
Supreme court

ஏர்டெல், வோடபோன்-ஐடியா, டாடா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு நிலுவைத் தொகையை செலுத்த 10 ஆண்டுகள் காலக்கெடு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. லைசென்ஸ், அலைக்கற்றை உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் ஒரு பகுதியை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.

அதன்படி, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் எனப்படும் AGR (Adjusted Gross Revenue) நிலுவைத் தொகையை தொலைத்தொடர்பு துறைக்கு ஏர்டெல், வோடபோன்-ஐடியா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ஆனால் இந்நிறுவனங்கள் உரிய தொகையை செலுத்தாததால் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

இதையடுத்து, சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இந்நிறுவனங்கள் உடனடியாகச் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையடுத்து ஒரு பகுதி தொகையை செலுத்திய நிறுவனங்கள், மீதத்தொகையைச் செலுத்த காலக்கெடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ.ஜி.ஆர். தொகையை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரவின் முக்கிய அம்சங்கள்

  • நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையின் 10 விழுக்காடு தொகையை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
  • அதேபோல் ஆண்டு தோறும் 10 விழுக்காடு தொகையை செலுத்தி, 2031ஆம் ஆண்டுக்குள் மொத்த தொகையையும் செலுத்திவிட வேண்டும். தொகையைச் செலுத்தாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருத்தப்படும். அதற்கு அபராதம், வட்டி உள்ளிட்டவற்றையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
  • ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான திவால் விவகாரங்களை தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் (NCLT - National Company Law Tribunal) விசாரிக்கும்.
  • நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைபிடிப்பதான, தங்களது உத்தரவாதத்தை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  • ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையின் மொத்த அளவு சுமார் ரூ.1.6 லட்சம் கோடி.
  • இந்த தீர்ப்புக்குப் பின்னர் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

இதையும் படிங்க: 30 நாட்களுக்கு இலவசமாக ஃபைப்பர் நெட் வழங்கும் ஜியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.