ETV Bharat / bharat

கரோனா: பெங்களூரு காவல் நிலையத்தில் சிறப்புப் புகார் இயந்திரம்

author img

By

Published : Jun 22, 2020, 11:57 AM IST

bengaluru-police-stations-to-set-up-kiosks-for-complaints
bengaluru-police-stations-to-set-up-kiosks-for-complaints

பெங்களூரு: கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெங்களூருவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் வெளியே புகார் அளிப்பதற்கென சிறப்புப் புகார் இயந்திரம் அமைக்கப்படும் என்று பெங்களூரு காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் அதிக அளவில் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு பெங்களூருவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் புகார் அளிக்க, காவல் நிலையத்திற்கு வெளியே கியோஸ்க் என்ற சிறப்புப் புகார் இயந்திரம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து காவல் உயர் அலுவலர்களுடன் தொலைபேசி மூலம் பேசிய காவல் ஆணையர், "காவல் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுவதோடு, முகக் கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் 55 வயதிற்கு மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர், காவல் துணை உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது

சீருடையில் வரும் காவலர்கள் மட்டுமே காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். காவலர்கள் முகக் கவசம் உள்ளிட்ட தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அதனுடன் காவலர்கள் பணிபுரியும்போது தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநிலத்தில் இதுவரை 24 காவலர்கள் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 பேர் மைசூரு, ஆறு பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.