ETV Bharat / bharat

தெலங்கானா தேர்தலை வைத்து ஆந்திராவில் சூதாட்டம்.. முக்கிய தலைவர்களின் வெற்றி, தோல்வி மீது பந்தயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 4:41 PM IST

Betting regarding telangana election: நவ.30-ஆம் தேதி தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதிகளின் வெற்றி, தோல்வி குறித்து ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

முக்கிய தலைவர்களின் வெற்றி தோல்வி வாய்ப்புகள் மீது பந்தயம்
தெலங்கானா தேர்தல் குறித்து ஆந்திராவில் சூதாட்டம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இங்குள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் தெலங்கானாவில் எங்கு பார்த்தாலும் இந்த தேர்தலில் எந்த தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பது தான் பேச்சாக உள்ளது.

பேச்சுகளை எல்லாம் தாண்டி தற்போது தெலங்கானாவின் தேர்தல் முடிவுகள் மற்றும் முக்கிய தலைவர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆந்திராவில் கோடிக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டுவருகிறது. இதற்காக புரோக்கர்கள் களம் இறங்கி வாட்ஸ் ஆப் குரூப்களை உருவாக்கி நிர்வகித்தும் வருகின்றனர்.

இந்த தேர்தலில் தெலங்கானாவில் அனைத்து கட்சிகளும் போட்டியை சந்தித்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கிரிக்கெட் பந்தய ஆபரேட்டர்களும் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தெலங்கானாவில் பிரபலங்கள் களமிறங்கும் தொகுதிகளில் பெரும் போட்டி நிலவி வருகிறது.

எல் பி நகர், செரிலிங்கம்பள்ளி, குகட்பல்லி, உப்பல், மல்காஜிகிரி, குத்புல்லாபூர், ஜூப்ளி ஹில்ஸ், கரீம்நகர், சூர்யாபேட்டை, ஹுசூராபாத், துப்பாக்கா, கஜ்வெல், மற்றும் ஜிஹெச்எம்சி தொகுதிகளுக்கு 1:5 (100 ரூபாய்க்கு ரூ. 500). அதாவது ஒருவர் ரூ.100 பந்தயம் கட்டி வெற்றி பெற்றால் அவருக்கு ரூ.500 கிடைக்கும். மேலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முன்னனி தலைவர்கள் நிற்கும் களத்தில் 1:10 (100 ரூபாய்க்கு ரூ1000) என புரோக்கர்கள் பந்தயத் தொகையை நிர்ணாயித்துள்ளனர்.

இதையும் படிங்க: “போராடிய விவசாயிகள் மீதுள்ள குண்டாஸ் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி, விஜயவாடா, குண்டூர் மற்றும் நெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த கிரிக்கெட் பந்தயம் மற்றும் சேவல் சண்டை அமைப்பாளர்கள் தெலங்கானா தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பந்தயம் கட்டி தோல்வி அடைந்தவர்களை ஏஜெண்டுகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பீமாவரம் பகுதியை சேர்ந்த இறால் குட்டை வியாபாரி ஒருவர் ரூ.1 கோடிக்கு பந்தயம் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி பெற்றால் ரூ. 5 கோடி லாபம், தோற்றால் ரூ.1 கோடி நஷ்டம் என கூறி புரோக்கர்களிடம் பிளாங்க் செக் (வெற்று வங்கி காசோலை) வழங்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் கிடைத்த தகவலின் படி இந்த சூதாட்டமானது கைரதாபாத்தின் முக்கிய மூன்று கட்சிகளில் வெற்றி வாய்ப்பு குறித்து நடந்து வருகிறது. ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் இரண்டு முக்கிய கட்சிகளின் பெரும்பான்மை வேட்பாளர்களை வைத்து யாராவது பந்தயம் கட்டினால், பெரும் லாபம் கிடைக்கும் என, புரோக்கர்கள் கூறி வருகின்றனர்.

பிஆர்எஸ் வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக கே.சி.ஆர் முதல்வராவார். ஆனால் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால் யார் முதல்வர்? என்ற கோணத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மீது பந்தயம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய கட்சித் தலைவர் ஒருவரின் முயற்சியால் ஏஜெண்டுகள் ஏற்கனவே களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த முக்கிய கட்சி தலைவர் ஒருவர், பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸின் வெற்றிகளை வைத்து தான் பெரும்பாலான சூதாட்டங்கள் நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த பந்தய கும்பல்களும் தெலங்கானா தேர்தலில் கவனம் செலுத்தி வருவது தெரிந்த ஒன்று.

அவர்கள் மாநிலத்தில் முகவர்களை உருவாக்கி, செயலிகள் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தயாராக உள்ளனர்” என விளக்கியுள்ளார். பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் பாதி கமிஷன் என்ற பெயரில் கழிக்கப்படுகிறதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: “மகன், மருமகன் நலனுக்காக திமுக ஆட்சி செய்து வருகிறது” - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.