ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி ராணுவ தின அணிவகுப்பும், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பும் தலைநகர் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்த இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், அணிவகுப்புகளில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். அணிவகுப்புகளில் பங்கேற்க வந்த வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 150 ராணுவ வீரர்களுக்கு அறிகுறியற்ற வகையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அறிகுறிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : டிச.31 ஆம் தேதியன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்த ஆளுநர் ஒப்புதல்!