அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? - tiruvannamalai annamalaiyar temple
Published : Apr 5, 2024, 7:22 AM IST
திருவண்ணாமலை: புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பங்குனி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி முடிந்து, நேற்று (வியாழக்கிழமை) அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எனப் பலரும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், பங்குனி மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் ரூ.2 கோடியே 55 லட்சத்து 2 ஆயிரத்து 820ம், தங்கம் 265 கிராம் மற்றும் வெள்ளி 2 ஆயிரத்து 322 கிலோ கிராம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.