கும்பகோணம் பட்டாபி ராமர் கோயிலில் 1008 அகல் விளக்குகளை கொண்டு சிறப்பு பூஜை!
Published : Jan 21, 2024, 10:41 PM IST
தஞ்சாவூர்: அயோத்தியில் ராமர் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நண்பகல் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ராமர் கோயில்களில் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண உற்சவங்களும் நடைபெறுகிறது.
அந்த வரிசையில், கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில், அமைந்துள்ள பழமையான பட்டாபி ராமர் திருக்கோயிலில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவைச் சுதர்சன பக்தர்கள் குழு மற்றும் மங்கள லலிதா சஹஸ்ரநாமம் பஜனை குழுவினரும் இணைந்து நடத்தினர். இதில், ராம நாம ஜபங்கள் செய்தபடி 1008 கல் விளக்குகளில்,பஞ்சு திரி மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபங்கள் ஏற்றினர்.
பின்னர் அவற்றை வரிசையாக மூலவர் சன்னதியின் இருபுறம், பிரகார பகுதி ஆகியவற்றில் வைத்ததுடன், தமிழில் ராமா என ஒளிரும் வகையில் அகல் விளக்குகளை வரிசையாக அடுக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மூலவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்தனர். இந்நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்குக்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.