வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி.. அல்வா, பக்கோடா கொடுத்து வாக்கு சேகரித்த ம.ஜ.கட்சியினர்! - lok sabha election 2024
Published : Apr 16, 2024, 3:07 PM IST
திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்தும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி அரசைக் கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், பொதுமக்களுக்கு அல்வா மற்றும் பக்கோடா வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பத்தாண்டுக் கால ஆட்சியில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை வழங்கவில்லை, பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவில்லை, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல், 25 கோடி ரூபாய் பெரும் முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து மக்களுக்குப் பிரதமர் அல்வா மற்றும் பக்கோடாவை வழங்கியுள்ளார்.
இதை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், மாவட்டச் செயலாளர் பாளையங்கோட்டை பாரூக் தலைமையில், பொதுமக்களுக்கு அல்வா மற்றும் பக்கோடா வழங்கி, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.