தயாராகும் ஜூனியர் ராமானுஜம்.. விருக்ஷா புக் ஆப் ரெக்காட்ஸில் இடம்பெற்ற தஞ்சை மாணவர்கள்!
Published : Feb 4, 2024, 5:17 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற மின்னல் வேக கணித போட்டியில், 6 முதல் 13 வயதிலான 8 மாணவ, மாணவியர்கள் 100 வினாடியில், நூறு இரு இலக்க கணித கேள்விகளுக்கு சரியான விடையளித்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், விருக்ஷா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பில் இன்று (பிப்.4) இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பெற்றோர், பயிற்றுனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மின்வேகத்தில் கணித கேள்விகளுக்கு விடையளிக்க ஜி மேக்ஸ் என்ற தனியார் நிறுவனம், மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. இந்நிலையில், கும்பகோணம் மகாமக கலையரங்கில் இன்று (பிப்.4) நடைபெற்ற போட்டியில் கணித பயிற்சி பெற்ற அக்ஷயா, ஹர்சிதா ஸ்ரீ, தீரன், ஆதிகேசவா, திவேஷ், தர்சன் உள்ளிட்ட எட்டு பேர் இரு இலக்க 100 கணித கேள்விகளுக்கு 100 வினாடிகளில் விடையளித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு விருக்ஷா புக் ஆப் ரெக்காட்ஸ் அமைப்பின் சார்பில், விருது மற்றும் சான்றிதழ்களை பயிற்சி மைய நிர்வாகி பழனிமாணிக்கம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து தேசிய அளவிலான மின்வேக கணித தேர்வு தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் பல்வேறு கல்வி நிலையங்களில் நடைபெற்றது.
இந்தப் போட்டியானது, யுகேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் 6 வயது வரை, 8 வயது வரை, 10 வயது வரை, 12 வயது வரை, 14 வயது வரை என 7 நிமிடங்களில் 200 கேள்விகள் விடையளிக்க 5 பிரிவுகளாக இப்போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்து 150 மாணவர், மாணவிகள் அவர்களது பெற்றோருடன் பங்கேற்றனர்.