ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு ஐஸ்.. தஞ்சையில் நூதன விழிப்புணர்வு!
Published : Feb 4, 2024, 1:45 PM IST
|Updated : Feb 4, 2024, 3:52 PM IST
தஞ்சாவூர்: வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, ஹெல்மெட் அணியாததே பெரும்பாலும் விபத்தில் உயிரிழப்பு நேரிட காரணமாக அமைகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில், தஞ்சை மாநகரப் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"ஐஸ்க்ரீம் குளுமை ஹெல்மெட் கடமை" என்ற தலைப்பில், தஞ்சை அண்ணா சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. மேலும், போலீசாரின் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் அணியாமல், தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எப்போதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.