தொழுகை முடிந்து வந்தவர்களுக்கு பணம் கொடுத்தாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? கசிந்த காணொலி! - Lok sabha Election 2024
Published : Apr 11, 2024, 2:01 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடியில், தொழுகை முடிந்து வந்தவர்களிடம் திமுக, அதிமுகவினர் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரோச் பூங்காவில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்து வந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தனது ஆதரவாளர்களுடன் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
அதேபோல், திமுகவினரும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இரு கட்சியினரும், தங்கள் வேட்பாளர்தான் வெற்றி பெறுவர் என்று மாறி, மாறி கோஷங்கள் எழுப்பி வாக்கு சேகரித்த நிலையில், திடீரென கூட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.