“போ சாமி..போ..” ஈரோட்டில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 10:38 PM IST

Updated : Feb 6, 2024, 6:52 PM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் மலைப் பகுதியில் சமீப நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானைகள், கேர்மாளம் சாலையில் வாகனங்களை வழிமறித்து, சாலையோரம் இருந்த தீவனங்களை சாப்பிட்டபடி நின்று கொண்டிருந்தது. குறுகிய வளைவு காரணமாக யானையைக் கடந்து செல்ல முடியாமல் அரசுப் பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரை மணி நேரமாக காத்திருந்தது. யானைகள் வெகு நேரமாகியும் அவ்விடத்தை விட்டு நகராததால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். அதனைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து கேரமாளம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் சாலையில் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : Feb 6, 2024, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.