முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்!
Published : Mar 5, 2024, 8:28 PM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது வைத்தீஸ்வரன் கோயில். இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், கோயிலில் உள்ள ஒவ்வொரு சாமி சன்னதிகளிலும் அவர் வழிபாடு செய்தார்.
இதேபோல், நேற்று மயிலாடுதுறை அடுத்த திருக்கடையூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4,448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும், செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இங்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.