“ஜோசியம்.. கிளி ஜோசியம்” - தங்கர் பச்சானுக்கு கிளி என்ன சொன்னது? - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 2:45 PM IST

thumbnail

கடலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், இயக்குநருமான தங்கர்பச்சான், அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் அவர் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த கிளி ஜோசியரிடம் தனக்கு ஜோசியம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதன்படி, கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து போட்டு இறுதியாக ஒரு அட்டையை ஜோசியரிடம் கொடுத்தது. அதில், அழகுமுத்து அய்யனார் சுவாமியின் படம் வந்ததையடுத்து, வெற்றி உங்களுக்கு என்று ஜோசியர் கூறினார். இதனால், தங்கர் பச்சான் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, ஜோசியம் பார்த்த கிளிக்கு தங்கர் பச்சான் வாழைப்பழத்தை உணவாக ஊட்டி விட்டு அங்கிருந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் இருந்த திருநங்கைகள் அவருக்கு திருஷ்டி சுத்தி போட்டு வழி அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.