''படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு'' - நடிகர் கருணாஸ் பேச்சு! - Lok sabha election 2024
Published : Apr 15, 2024, 5:26 PM IST
திண்டுக்கல்: உலகில் பொய் சொல்கிறவர்களுக்குப் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும் இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள் என நிலக்கோட்டை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று (ஏப்.15) பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் கருணாஸ் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில், திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, முக்குலத்தோர் புலிப் படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ், இன்று (ஏப்.15) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார், வாய்ப்பில்ல ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.
படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உலகில் பொய் சொல்கிறவர்களுக்குப் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும் இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை”, என குற்றம் சாட்டினர்.
இந்த பிரச்சார நிகழ்வில் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வத்தலக்குண்டு தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.