ETV Bharat / state

மாயூரநாதர் கோயில் நிலம் முறைகேடாக விற்பனை? கோயில் முன் போராட்டத்தில் குதித்த பெண்கள் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன? - Mayuranathar temple site

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 1:34 PM IST

Mayuranathar Temple land issue
Mayuranathar Temple land issue

Mayuranathar Temple land issue: மாயூரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயூரநாதர் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட துர்காதேவி பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர், மாற்றுத்திறனாளி குணசேகரன். இவருக்கு இந்திரா என்ற சகோதரி உள்ளார். இவர்களது மறைந்த தந்தை முத்துசாமி பெயரில் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 144 குழி இடம் உள்ளது. முத்துசாமிக்கு இந்திரா என்ற மகளும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனர்.

இதில் உள்ள 50 குழி இடத்தை தனது சகோதரியான இந்திராவிற்கு குணசேகரன் எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், குணசேகரனுக்கு தெரியாமல் அவரது சகோதரி இந்திரா, மாயூரநாதர் ஆலயத்தின் கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உதவியுடன் 50 குழி இடத்தை 80 குழி என்று திருத்தி முருகன் என்பவருக்கு பகுதி மாற்றம் செய்து தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி குணசேகரன், இது குறித்து கோயில் நிர்வாகத்துடன் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குணசேகரனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்துள்ளார்.

இதனிடையே, மாற்றித்திறனாளி குணசேகரை கணேசன் உள்ளிட்டோர் தாக்கிதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று (செவ்வாய்கிழமை) காலையிலிருந்து கோயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கோயில் உதவி கண்காணிப்பாளர் கணேசன் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன் குடும்பத்தார்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து குணசேகரன் மகள் துர்காதேவி கூறுகையில், "காலையில் இருந்து சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக போராடிக்கொண்டு இருக்கிறோம். கோயில் நிர்வாகம் உட்பட யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை.

என்னுடைய தந்தை (குணசேகரன்) இடத்தை முறைகேடாக விற்பனை செய்துள்ளார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் பலரிடம் முறையிட்டதன் பேரின் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் நிலத்தை சர்வே செய்தனர். இதனையறிந்த கணேசன், இந்திரா, மற்றும் முருகன் உள்ளிட்ட 5 நபர்கள் எங்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் எங்களைத் தாக்கினார். இதனால், என்னுடைய தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உறிய நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப் போவதில்லை" என்றார்.

மாயூரநாதர் கோவிலில் காலை முதல் தாய் தனது இரண்டு மகள்களுடன் கோயில் நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் காலை தொடங்கிய தர்ணா போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர். இதனால் கோயிலை பூட்டமுடியவில்லை. இது குறித்து தகவலறிந்த போலீசார் கோயிலுக்கு வருகை புரிந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாகத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து குணசேகரன் குடும்பத்தார் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? - Aatral Ashok Kumar Assert

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.