ETV Bharat / state

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. குறையுமா? தொடர்ந்து அதிகரிக்குமா? - வியாபாரிகள் கூறும் காரணம் என்ன? - gold rate in chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 4:33 PM IST

Etv Bharat
Etv Bharat

gold rate hike reason: சென்னையில் மார்ச் மாத துவக்கத்தில் இருந்து ஏறுமுகத்தை கண்ட தங்கத்தின் விலையானது, இந்தாண்டு முடிவுக்குள் சவரனுக்கு ரூ.60 ஆயிரத்தை எட்டும் என கூறுகின்றனர். இது தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார் கூறியதை பார்க்கலாம்..

சென்னை: இந்திய மக்களின் சேமிப்பில் எப்போதுமே தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மார்ச் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வதும், அவ்வப்போது குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் கடந்த 19-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49 ஆயிரத்து 80க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை ரூ.49 ஆயிரத்திற்கு மேலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.51 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 10 நாட்களில் வெள்ளி விலையும் கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றை மாலை நேர நிலவரப்படி வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.80.80 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம்: பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கரோனா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்தது. ஆனால், தற்போது எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் தொடர் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார், ஈடிவி பாரத்திற்கு கூறுகையில், "எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வேலை குறியீடு வீழ்ச்சியினால், நிதி நெருக்கடி காரணமாக அங்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதனால், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்ற துறைகளின் வளர்ச்சி அதிமாகும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் பார்வை மற்ற துறைகளின் மீது விழும். அப்போது வேண்டுமானால் தங்கத்தின் விலை குறைய வாயப்புள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தங்கம் விலை உயர்வு என்பது மக்களுக்கு மட்டுமல்லாமல், வியாபாரிகளுக்கும் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை நிச்சயம் சவரனுக்கு ரூ.8,000 முதல் 9,000 உயர்ந்து 60 ஆயிரத்தை எட்டும் வாய்ப்புள்ளது" என உறுதிப்படக் கூறினார்.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?: தங்கத்தின் மீதான முதலீடு தொடர்பாக பேசிய அவர், "தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும், தங்கத்தின் மீது நிச்சயம் முதலீடு செய்யலாம். ஏனென்றால், இனி வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இல்லை. விலை உயர்வை பொருத்தவரை ஏறுமுகமாகதான் இருக்கும். ஒவ்வொரு நாடும் தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநாட்ட தங்கத்தை கையிருப்பு வைத்துக் கொள்கிறது. அந்த நிலைமைதான் இப்போதும் நடந்து வருகிறது. அரசே தங்கத்தின் மீது தன்னுடைய முதலீட்டை செலுத்துகிறது. பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதே தங்கத்தின் தொடர்ச்சி விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் எனத் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு விலையுயர்ந்த பொருட்களின் விலை குறையும். ஆனால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. அதனால் இப்போது இருக்கும் விலையை விட இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்பதில் சந்தேகம் இல்லை" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்.. கையாளும் யுக்தி என்ன? - Nainar Nagendran Election Campaign

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.