ETV Bharat / state

"அதிமுகவுக்கு ஓட்டு போடலைனா?" - வாக்காளர்களுக்கு எஸ்.பி. வேலுமணியின் கண்டிஷன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 5:49 PM IST

அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது செல்லாத‌ ஓட்டு தான்
அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது செல்லாத‌ ஓட்டு தான்

ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும், பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது செல்லாத‌ ஓட்டு தான்

கோவை: தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "எதிர்க்கட்சி தலைவராகக் கடுமையான அறிக்கைகள் மூலம் ஈபிஎஸ் தமிழ்நாடு மக்களை காப்பாற்றி கொண்டு உள்ளார். திமுக நிர்வாகி 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள். திமுக பொறுப்பாளர்கள் கஞ்சா விற்கிறார்கள், கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை.

பத்திரிகையாளர்களும் காவல்துறையும் சரியாக இருந்தால் இது எல்லாம் நடக்காது. மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. விளம்பரத்தால் மட்டுமே இந்த அரசு செயல்படுகிறது. சிறுவாணி அணையில் தண்ணீரை கேரள அரசு குறைத்ததைத் தட்டி கேட்கவில்லை. திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான்.

38 எம்.பி களும் நாடாளுமன்றத்தில் தண்டமாக சீட்டை தேய்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசாமல் இருக்கும் நிலையில் 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

கோவையை சுற்றியுள்ள 5 தொகுதிகளின் எம்.பி.க்களை பார்க்க முடியவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக திமுகவினர் வந்து ஏமாற்றுவார்கள். திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள்.

அது திமுக குடும்ப பணம் இல்லை, உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திமுக அரசை விடக் கூடுதலாக தருவார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்கள் நினைக்கின்றனர். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். கோவை மாவட்டத்திற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். திமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது செல்லாத‌ ஓட்டாகப்‌ போய்விடும். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்குப் போட வேண்டும், இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டால் தான் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

திமுக கூட்டணிக் கட்சிகள் திமுகவிற்கு அடிமை, நாங்கள் எப்போதும், யாருக்கும் அடிமை இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். கோவை மாவட்டத்தை புறக்கணித்த திமுகவை நாம் புறக்கணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "லஞ்சம் ஒழிப்பு குறித்து அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது" - பி.ஆர்.நடராஜன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.