தென்காசி: தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (மார்ச்12) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், "தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் 8 மாதமாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழக மக்களைப் பாதிக்கின்ற வகையில் போதை மருந்து விற்பனை செய்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போது, திமுகவில் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது. திமுக என்று இத்தனை காலம் கூறி வந்தனர். இனி அக்கட்சியை 'போதைப் பொருள் மாஃபியா கழகம்' என்று அழைக்கலாம்.
தமிழகத்தில் போதை மருந்து மாஃபியாக்களை அதிகம் உள்ளனர். போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது. மேலும், கட்சிக்கு நிதி கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். ஒரு குற்றவாளியிடம் இருந்து ஆளும் கட்சி பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
அந்த குற்றவாளிகளுடன் ஆளும் திமுக கட்சி தொடர்பில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பல ஆண்டுகளாகக் குற்றவாளிகளிடம் பணம் பெற்று இருக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் அக்கிரமும், அநியாயங்களும், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகி உள்ளனர்.
இந்த கொள்ளைக் கூட்டங்களிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிப் பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். இதற்காகவே பாஜக பக்கம் தமிழக மக்கள் வருகிறார்கள். தமிழக மக்கள் பாஜக பக்கம் நிற்பார்கள். தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெறுகிறது" - அமைச்சர் கே.என்.நேரு தகவல்