ETV Bharat / state

தஞ்சாவூரில் புதிய வருவாய் வட்டமாக திருவோணம் உதயம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:50 PM IST

A New Revenue Block In Thanjavur
தஞ்சாவூரில் புதிய வருவாய் வட்டமாக திருவோணம் உதயம்

A New Revenue Block In Thanjavur: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களை சீரமைத்து, திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் "தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து, புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்" என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக, ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன், இந்த சேவைகளைப் பெறுவதற்காக, அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்களின் துயர் துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாக களைவதற்கு முடிவு செய்தார்.

அந்த முடிவை செயல்படுத்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள், எஞ்சிய வாழ்நாளைக் குடும்பத்தினருடன் வசிக்க நடவடிக்கை - திமுகவை வலியுறுத்திய இபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.