ETV Bharat / state

“ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?” - பிரதமரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 9:53 PM IST

TN CM MK Stalin
TN CM MK Stalin

TN CM MK Stalin: சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார் எனவும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிரதமர் மோடி ஏன் நிதி தரவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சித் திட்ட நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார்.

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை ரூ.4,181கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த திட்டத்தின் பெயரே போதும், நம்முடைய திராவிட மாடல் அரசு இந்தப் பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது. திமுக உருவானதும் வட சென்னையில்தான்.

சென்னையில் நீங்கள் பார்க்கின்ற எல்லா வளர்ச்சிப் பணிகளுமே திமுக உருவாக்கியதுதான். இப்படி சென்னைக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வளர்ச்சியை ஏற்படுத்தியது நம்முடைய திமுக அரசுதான். திமுக ஆட்சியில்தான் சென்னையின் அந்த காலம் பொற்காலமாக இருந்தது.

இடைக்காலத்தில், பத்து வருடம் பதவியில் இருந்தவர்கள் சென்னையை சீரழித்து பாழ்படுத்தினார்கள். பத்து வருடம் கழித்து, இப்போது மீண்டும் திமுக ஆட்சி மாநிலத்தில் உதயமாகி உள்ளது. சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்காகவே தீட்டப்பட்டிருக்கின்ற சிறப்புத் திட்டம்தான் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்'

திமுக அரசின் கடந்த பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்தோம். ஆனால், வட சென்னையின் மக்கள் தொகை, இட பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல், இந்தப் பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள், இதையெல்லாம் மனதில் வைத்து, இன்றைக்கு அந்த தொகையை நான்கு மடங்கு உயர்த்தி, 4 ஆயிரத்து 181 கோடி ரூபாய் மதிப்பில், 11 அரசுத் துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு இந்த மெகா திட்டம் செயல்படப் போகின்றது.

இந்த திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு 440 கோடியே 62 லட்சம் ரூபாயும், இதர துறைகளின் திட்டங்களுக்கு 886 கோடியே 46 லட்சம் ரூபாயும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்யும். மீதமுள்ள நிதியை அந்தந்த துறைகள், வாரியங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த திட்டத்தில் என்னென்ன செய்யப் போகிறோம்? மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டுவசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள நிர்மாணித்தல், மேம்படுத்துதல், முக்கியமான பகுதிகளில் துணை மின் நிலையங்கள், போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மறுவாழ்வு மையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள், மருத்துவ சுகாதார நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு, தரமான குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும்.

அதுமட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் வடசென்னை முழுக்க முக்கியமான இடங்களில் நிறுவப்படும்.

640 கோடி ரூபாய் செலவில், கொடுங்கையூரில் உயிரி சுரங்கத் திட்டம், 238 கோடி ரூபாய் செலவில் இரண்டு பெரிய பாலங்கள், 80 கோடி ரூபாயில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம், 823 கோடி ரூபாய் செலவில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7 ஆயிரத்து 60 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 9 ஆயிரத்து 798 புதிய குடியிருப்புகள் ஆயிரத்து 567 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் போகிறோம்.

இப்படி, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்கள் உள்பட அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுறுகிறபோது, வடசென்னையின் வரலாற்றில், ஒரு புதிய சாகப்தத்தை திமுக எழுதியிருக்கும் என்பதை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சி: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது? சென்னை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டுச் சென்றார்கள். அவர்களைப் போன்றுதான் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை.

பிரதமர் மோடி எதற்கு வருகிறார்? நாளைக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப்போகிறாறா? இல்லை, ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா? குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார். மறுநாள் நிவாரண நிதி கொடுத்தார்.

குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும், நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணி: திமுக ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, மெட்ரோ பணிக்கு நிதி கேட்டேன். இப்போது 3 வருடம் ஆகிறது. என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள்.

ஆனால், நமக்கு ஒன்றும் தரவில்லை. நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன? மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது? நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம்தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசாதான் மறுபடியும் நமக்கு வருகிறது. அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை.

நிதி கேட்டு கடிதம் எழுதுகிறோம். நம்முடைய எம்.பி.க்கள் எல்லாம், நிதி கொடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். அதற்கு பிறகுதான் அந்த 28 பைசாவையும் கொடுக்கிறார்கள். பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் கேட்கிறோம்.

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த நாங்கள், உலகின் தலைசிறந்த கூட்டாட்சி நாடாக, மக்களாட்சி நாடாக இந்தியா வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கிறார்கள், பத்து ஆண்டுகளில் என்ன சிறப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். "பதில் கூறுங்கள் பிரதமர் அவர்களே" என மக்கள் கேட்கிறார்கள், நாங்கள் கேட்கவில்லை.

தமிழ்நாட்டை சீரழித்த அதிமுகவையும், தமிழ்நாட்டை கண்டுகொள்ளாத மத்திய பாஜகவையும் மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் திராவிட மாடல் அரசும், உங்களுக்காக எந்நாளும் உழைக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இருக்கிறேன்.

இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்ற வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள், அதன் அடையாளம்தான். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களான நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கு துணை நிற்க, உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ப்போம், இந்தியாவை காப்போம்" என பேசினார்.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் - மு.க.ஸ்டாலின் வருத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.