ETV Bharat / state

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Theni Mahila Court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:22 PM IST

Etv Bharat
Etv Bharat

Theni Court: தேனியில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி: தேனி மாவட்டம், போடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சேதுபதி என்ற நடராஜன் என்பவர் புதிய வீடு கட்டி வந்துள்ளார். அப்பொழுது, வீடு கட்ட போதிய பணம் இல்லாத நிலையில், பணத்திற்காக கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமி (68) என்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, அவரின் வாயில் துணியை வைத்து அடைத்து, தலையணை கொண்டு முகத்தில் அழுத்தி, மூச்சை நிறுத்தி கொலை செய்துவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் மூதாட்டி இறந்த நிலையில் கிடைப்பதை பார்த்த அவரது மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை செய்த நபரை தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி என்ற நடராஜன், மூதாட்டியை நகைக்காக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, போடி புறநகர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று, தடயங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் மூதாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், நகையை திருடிச் சென்றதற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் என இரு பிரிவுகளில் தீர்ப்பு வழங்கியதோடு, இந்த தீர்ப்பை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பினை தொடர்ந்து காவல்துறையினர் நடராஜனை சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: 10 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.. தஞ்சையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.