ETV Bharat / state

கோவையில் கமல்ஹாசன் போட்டியிட்டால் என்ன ஆகும்?- எஸ்.ஜி.சூர்யா பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 3:08 PM IST

opinion-hearing-meeting-regarding-the-selection-of-coimbatore-bjp-candidate
எஸ்.ஜி.சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பு

SG Suryah: வரவிருக்கும் நாடளுமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர் என பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜி.சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் மாவட்டம், வேட்பாளர் தேர்வு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா பேசுகையில், “வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

அனைவரையும் கலந்தாலோசித்து, வேட்பாளர் குறித்து முடிவு செய்யலாம் என தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கருத்துக்களைச் சேகரித்து தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்.

பாஜகவில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளனர். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறமும், கருத்துக் கேட்புக் கூட்டம் ஒருபுறம் நடைபெறுகிறது” என்றார். இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “செல்லாத ஓட்டாக இருந்தவர்கள்தான் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து, 20 சதவிகித வாக்குகளைப் பெற்றோம்.

எனவே, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, யார் செல்லாத ஓட்டுகள் என்பது எல்லாம் தெரிய வரும். கடந்த ஒன்றரை வருடங்களில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா என இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியினர்தான் பிரதமரை அழைத்து வந்தனர். இன்று பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக பேசுவது, நகை முரணாக உள்ளது.

வாரிசு அரசியலும், ஊழலும் திமுகவிற்கு எப்போதும் களங்கமாக இருக்கக்கூடிய ஒன்று. அதைத்தான் பிரதமர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். ஆளும் கட்சியை எதிர்த்துதான் அரசியல் என்ற சித்தாந்த அடிப்படையில் திமுகவை விமர்சிக்கிறோம். கோவை தொகுதி, பாஜகவுக்கு மிக முக்கியமான தொகுதி. கமல்ஹாசனை எதிர்த்து எங்களுடைய வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். குறிப்பாக, 1998, 1999 காலகட்டங்களில் இங்கு பாஜக எம்பி இருந்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக பெறக்கூடிய ஒரு தொகுதி இது. நட்சத்திர தொகுதி என்றால், நட்சத்திரங்கள்தான் நிற்க வேண்டும் என்பது இல்லை, எங்கள் நிர்வாகிகளின் கருத்துக்கள் என்ன, அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை தலைமையிடம் நாங்கள் கூறுவோம். கடந்த முறை வேட்பாளரை (கமல்ஹாசன்) எப்படித் தோற்கடித்தோமோ, அதேபோல் இந்த முறையும் தோற்கடிக்க பாஜக தயாராக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திருப்பம்.. பெண் உள்ளிட்ட மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.