ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரனை ஏப்.4 தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 1:59 PM IST

Senthil balaji
செந்தில் பாலாஜி

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கின் விசாரணை நடத்துவதற்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்பதால் வழக்கை ஏப்ரல் 4 தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றப்பத்திரிகையில் குற்றவாளி எனச் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 4 தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "லஞ்சம் ஒழிப்பு குறித்து அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது" - பி.ஆர்.நடராஜன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.