ETV Bharat / state

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் ரமேஷ் அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 10:52 PM IST

special-joint-commissioner-of-labor-ramesh-has-announced-transport-unions-talks-will-be-held-again
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் ரமேஷ் அறிவிப்பு

Special joint commissioner of labor: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படாத காரணத்தினால் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 தொழிற்சங்கங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பஞ்சப்படி, தற்போது பணி செய்து வரும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி 19ஆம் தேதி சென்னையில் உள்ள போக்குவரத்து தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டம் பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கல்வி நிலைய கூட்ட அரங்கில் இன்று (ஜனவரி 19) நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்குத் தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால் கிதியோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மக்களின் நலனை முக்கியமாகக் கருதி, போராட்ட ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். போராடிய ஊழியர்களின் மீது துறைரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

போக்குவரத்து சங்கங்கள் உடனான பேச்சு வார்த்தை: இந்த நிலையில் இன்று (ஜனவரி 19) தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துக் கழக ஆணையர் ஆல்.பி.ஜான் வர்கீஸ், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அம்பத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள கல்வி நிலைய கூட்ட அரங்கில் அரசுப் போக்குவரத்து தொழிற் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் சேர்ந்த உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவ்வப்போது காரசாரமான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படாத காரணத்தினால் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மீண்டும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் அறிவித்துள்ளார். அந்த பேச்சுவார்த்தை கூட்டத்திலும் தொழில் சங்கங்களின் 6 கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேலோ இந்தியா; சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.