ETV Bharat / state

மயிலாடுதுறையில் பழிக்குப் பழி கொலை.. 7 பேர் கைது! - Mayiladuthurai murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 10:41 PM IST

மயிலாடுதுறையில் விசிக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை
மயிலாடுதுறையில் விசிக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை

Mayiladuthurai Murder: மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் அஜித்குமார் (26). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், நேற்று (மார்ச் 20) இரவு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்குவீதி பகுதியில், இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணன் உடன் சென்ற போது, மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி, தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடன் வந்த சரவணன் கையில் வெட்டுக் காயத்துடன் போலீசாரால் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அஜித்குமார் உடல் கைப்பற்றப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் உறவினர்கள் நேற்றுமுதல் அஜித்குமார் உடலை பெறாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடைகளை சேதப்படுத்தியதால், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வருவது தடை செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை போலீசார் கொலைச் சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த நபர்களை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு வன்னியர் சங்க முன்னாள் நகர பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நேற்று கொடூரமாக தலை சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற பல கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ள சரவணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அஜித்குமார் கொலை சம்பவத்தில் 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க பிரமுகரின் சகோதரர் மில்கி என்ற சந்திரமோகன்(29), மணக்குடி பகுதியைச் சேர்ந்த சதீஸ் (26), மயிலாடுதுறையைச் சேர்ந்த பாம் பாலாஜி (29), சித்தமல்லியைச் சேர்ந்த ஆவன்னா என்கிற ஶ்ரீராம் (27), திருவிழந்தூரைச் சேர்ந்த மௌலி என்கின்ற சந்திரமௌலி (24), வக்காரமாரியைச் சேர்ந்த மோகன்தாஸ் (28), தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தியநாதன் (20) ஆகிய 7 பேரை குழந்தைகள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, விசாரணையில் வன்னியர் சங்க பிரமுகர் கண்ணன் படுகொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சதித்திட்டம் தீட்டிய வழக்கில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வராததால் மயிலாடுதுறை நகர பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் மயிலாடுதுறையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்! - Vaitheeswaran Temple Therottam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.