ETV Bharat / state

செந்தில் பாலாஜியை பழிவாங்குகிறோமா? - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்த பதில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 4:14 PM IST

Updated : Mar 4, 2024, 5:16 PM IST

Etv Bharat
Etv Bharat

Senthil balaji Case: செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, விசாரணையை நாளை மறு தினத்திற்கு (மார்ச் 6) தள்ளி வைத்தார்.

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியின் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதை மறுப்பதாகக் கூறி, சட்டப்படி தான் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மோசடி குற்றத்தில் செந்தில் பாலாஜிக்கு பங்கு உள்ளதைப் பல நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தி உள்ளதாகவும், வழக்கின் முழுமையான சாட்சி விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்தால் மட்டுமே அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் மதிப்பீடு செய்ய முடியும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றக் குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளதால், தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையைத் துவங்கத் தயாராக உள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாகத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழக்கைத் தினசரி அடிப்படையில் விசாரணை செய்து, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், விசாரணையை நாளை மறு தினத்திற்கு (மார்ச் 6) தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ராஜிவ்காந்தி கொலை வழக்கு; மூவரை இலங்கைக்கு அனுப்பத் தமிழக அரசு கோரிக்கை! உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்ன?

Last Updated :Mar 4, 2024, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.