ETV Bharat / state

தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு எப்படிக் கொடுத்தீர்கள்? சின்னம் ஒதுக்கீடு குறித்து சீமான் சரமாரி கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 10:01 PM IST

சின்னம் ஒதுக்கீடு குறித்து சீமான் சரமாரி கேள்வி
சின்னம் ஒதுக்கீடு குறித்து சீமான் சரமாரி கேள்வி

NTK Seeman Byte: தேசிய மலர் தாமரையை பாஜகவுக்கு எப்படிக் கொடுத்தீர்கள், ஒரு கட்சியின் சின்னமாகத் தேசிய மலர் இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு பெறுவது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "நம்மைப் போல் அவர்களும் பதிவு செய்யப்பட்ட கட்சி தான். அவர் கர்நாடகாவில் ஒரு சின்னம், ஆந்திராவில் ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார். 11 மாநிலத்திற்கு ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார்.

அவர்களிடம் சின்னம் குறித்துக் கேட்ட போது நான் கேட்கவில்லை, அவர்கள் தான் கொடுத்ததாகக் கூறுகின்றனர். நான் ஏற்கனவே, 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன், 7 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்குப் பிறகு நான் தான். அதை ஏற்காமல் முதலில் மனு கொடுத்ததாகச் சொல்கின்றனர். வெள்ளச் சேதம் காரணமாக தூத்துக்குடி சென்றதால் அந்த நேரத்தில் நான் கொஞ்சம் தாமதமாகக் கொடுத்தேன்.

தமிழ்நாட்டில் 7 சதவீதம் வாக்கு வங்கி இருக்கும் போது எனக்குக் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். டிசம்பர் 17ஆம் தேதி மனு கொடுத்த போதே சின்னத்தை எடுத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் நான் சின்னம் வாங்கும் போது தேர்தல் அறிவித்து 10 நாட்கள் கழித்துக் கொடுத்ததாகவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் தேர்தல் வரவில்லை, தேர்தல் அறிவிக்கவில்லை, ஆனால் 17ஆம் தேதியே எப்படி அந்த சின்னத்தைக் கொடுத்தீர்கள்? இதை திட்டமிட்டே செய்ததாகத் தான் நினைக்கிறேன்.

நாம் கட்சி ஆரம்பித்ததும் விவசாயி சின்னம் தருவதாக இல்லை, நான் கொண்டு போனதால் தான் விவசாயி. என்னுடைய மாநிலமான தமிழ்நாடு, புதுச்சேரியில் எனக்கு ஒதுக்குங்கள். முன்னுரிமை அடிப்படையில் விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறோம், அவர் பரிந்துரைப்பதாகக் கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்ல உள்ளோம், எனக்கு அநீதி இழைக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

எந்த சின்னமும் இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவேன். நான் முதலில் புலி கேட்டேன், அது தேசிய விலங்கு என்றனர். அடுத்து மயில் கேட்டேன், தேசியப் பறவை என்றனர். ஆனால் தேசிய மலர் தாமரையை பாஜகவுக்கு எப்படிக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன்.

ஒரு கட்சியின் சின்னமாகத் தேசிய மலர் இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். நீங்கள் அந்த மாதிரி கொடுத்திருக்கக் கூடாது தானே? தேர்தல் நேரத்தில் சின்னங்களை எல்லாம் மறைக்கின்றீர்கள். கை சின்னத்தைக் கொடுத்தீர்கள். வாக்கு செலுத்தி விட்டு கையை ஆட்டிக் கொண்டு சென்றால் கையை வெட்டி விடுவீர்களா? நீங்கள் அப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொருவருக்கும் புதிது புதிதாகச் சின்னம் கொடுத்துவிடுங்கள். 75 வருடம் ஒரு கட்சி, ஒரே சின்னம். 65 வருடம் ஒரு கட்சி, ஒரே சின்னம். அரசு நலத்திட்டத்திலும் அதை போடுகிறார்கள். தேர்தலில் 8 சதவீதம் வாக்குகள் பெற வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஆனால், 7 சதவீதம் தொட்ட உடன் சின்னத்தைத் தூக்கி விடுகின்றீர்கள், இது ஜனநாயகமாக இல்லை. லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். எந்த சின்னத்தைக் கொடுத்தாலும் போட்டியிடுவேன். விளக்குமாறு சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்கவில்லையா? இன்னும் உத்தரவு வரவில்லையே. உத்தரவு வந்த பிறகு உச்சநீதிமன்றம் போவேன்.

எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்துத் தான் வாக்களிப்பார்கள். நான் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். பாலின் சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்று நான் சொல்லும் போது சிரித்தீர்கள்.

இப்போது பிரதமர் சொல்லும் போது ரசித்துக் கேட்கிறீர்கள். நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதை ஒட்டிய சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பழிவாங்குகிறோமா? - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்த பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.