திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் (பிப்.17) பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினரான அன்பழகன், சேவூர் ராமசந்திரன், பரந்தாமன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் உண்டு உறைவிட பள்ளி, பழங்குடியினருக்கான புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள், கட்டுமான பணிகள், வாணியம்பாடியில் கட்டப்பட்டு வரும் நீதிபதி குடியிருப்பு கட்டடம், அங்கன்வாடி மையம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-ம் தளத்தில் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், "திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை எடுத்துச் சொல்லி, விரைவாக அதற்கான ஏற்பாட்டை இந்த குழு தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரைக்கும்.
மேலும், திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்டோர் பாம்பு கடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றன. எனவே மருத்துவர்கள் பாம்பு கடி மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலாண்மை குழு விரைவாக ஏற்படுத்த பரிந்துரைக்கப்படும்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. சில அதிகாரிகளுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆய்வுக் குழு வருகிறது என்று தெரிந்தும், சரியாக புள்ளி விபரங்களைக் கொடுக்கத் தெரியவில்லை என்று கடிந்து இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!