ETV Bharat / state

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 7:15 AM IST

Etv Bharat
Etv Bharat

Madurai bench: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகக் கூறி, மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அங்கித் திவாரி, ரூ.3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

மருத்துவர் சுரேஷ் பாபு, ரூ.3 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில், ரூ.51 லட்சம் கண்டிப்பான முறையில் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில், சுரேஷ் பாபு 20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மூலமாக அங்கித் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் சுரேஷ் பாபு, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் ரசாயனக் கலவைகள் தடவிய ரூ.500 நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து, அங்கித் திவாரியிடம் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கோண்டு தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, 2வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், “எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கும் பட்சத்தில், நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று (பிப்.16) நீதிபதி விவேக் குமார் சிங்க் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி, ''லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.