ETV Bharat / state

வேதாந்த குழும மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஸ்டாலினுக்கு நன்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 6:50 PM IST

thoothukudi-protesters-thanked-cm-mk-stalin-for-his-actions-against-sterlite-plant-in-chennai
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழவினர்..

Sterlite plant against protesters: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்ததாக தமிழக அரசிற்கு தூத்துக்குடி மக்கள் சார்பாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக் குழுவினர் சார்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ஆலை காற்று மற்றும் நீர் மாசுபாடுச் சட்டங்களை நீண்ட காலமாக மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த தமிழக அரசிற்கு தூத்துக்குடி மக்கள் சார்பாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய போராட்டக் குழுவினர் சார்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைத்தளப் பதிவில், "சுற்றுச்சூழலுக்கும், தூத்துக்குடி மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கு தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

அவர்கள் வைத்த மற்ற கோரிக்கைகள் பற்றி தங்கை கனிமொழி எடுத்துரைத்தார். அவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும்" என தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது X வலைத்தளப் பதிவில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தொடர் சட்டப் போராட்டங்களால், தூத்துக்குடி மக்களுக்கான நீதியை உறுதி செய்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, போராட்டக் குழுவைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, சிடர் பிஸ்ளி, அம்ஜித், வசத்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினருடன் சந்தித்து நன்றி தெரிவித்தோம்" என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.