ETV Bharat / state

சென்னையில் பிரதமர் ரோடு ஷோ.. வேட்டி சட்டையில் வந்த மோடி! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 8:25 PM IST

Updated : Apr 9, 2024, 10:10 PM IST

prime-minister-narendra-modi-road-show-campaign-at-chennai
சென்னையில் நடைப்பெற்ற பிரதமர் ரோடு ஷோ

Chennai PM Narendra Modi Road Show: பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ரோடு ஷோவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, ரோடு ஷோ மூலம் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, கோயம்புத்தூரில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை தியாகராய நகர், பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணி பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களைத் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்றனர்.

ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே, தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டு, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருந்தது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தன் கையில் தாமரை சின்னத்தை பொதுமக்களிடையே காண்பித்தபடியும், கையசைத்தும் பிரச்சார வாகனத்தில் சென்றார். நிகழ்ச்சி நடைபெற்ற தியாகராயநகர் பகுதி, பிரதமர் மோடி தங்கும் கிண்டி ஆளுநர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இரவு சென்னை ரோடு ஷோ முடிந்ததும், பிரதமர் மோடி கிண்டி சென்று ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அவர், நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு வேலூர் கோட்டை மைதானத்தில், காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், வேலூர் பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவர், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படைத் தளத்துக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு சூலூா் விமானப்படைத் தளத்துக்குத் திரும்பும் பிரதமர், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழக்கும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு! - Lok Sabha Election 2024

Last Updated :Apr 9, 2024, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.