ETV Bharat / state

“ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன அனைவரும் மையத்திற்கே திரும்பிவிட்டனர்” - காவல்துறை தகவல்! - Isha yoga centre at Velliyangiri

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:40 PM IST

police-said-to-mhc-about-all-missing-persons-return-to-isha-yoga-centre-at-velliyangiri
ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போனவர்கள், யோகா மையத்திற்கே திரும்பியதாக காவல்துறை தெரிவிப்பு..

ISHA Foundation ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் அனைவரும் ஈஷா மையத்திற்கே திரும்ப வந்து விட்டதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகப் பணியாற்றி வந்ததாகவும், இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி,ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைபேசியில் அழைத்து கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம், ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், ஈஷா யோகா மைய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடைபெற்றதாகவும், மேலும் விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே காணாமல் போன 6 பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே சென்றதாகவும், ஆனால் தற்போது அவர்களில் 5 பேர் திரும்ப வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மனுதாரர் தான் இன்னும் காணவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.