ETV Bharat / state

புல்வெளி மைதானத்திற்குள் செல்ல தடை.. ஊட்டி தாவரவியல் பூங்கா நிர்வாகம் அதிரடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 3:36 PM IST

not allowed to walk inside the grassy grounds
புல்வெளி மைதானத்திற்குள் நடந்து செல்ல தடை

Ooty Botanical Garden: கோடையை முன்னிட்டு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்புப் பணி நடந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் புல்வெளி மைதானத்திற்குள் நடந்து செல்ல அனுமதி இல்லை என பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரபலமான பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகள். தமிழ்நாட்டில் 'மலைகளின் அரசி' என கருதப்படும் ஊட்டி, அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், கோடை சீசனில் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவற்றைக் கண்டு ரசிக்கவும், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, உலக பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானம், ஆசியாவிலேயே பெரிய புல்வெளி மைதானமாக கருதப்படுகிறது. தற்போது இந்த புல்வெளி மைதானங்களை பனியில் இருந்து பாதுகாக்கும் வகையில், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய ரக விதைகள் பூங்காவில் விதைக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகையால், தற்போது புல்வெளி மைதானங்கள் பராமரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் மைதானத்திற்குள் செல்ல தடை என பூங்கா நிர்வாகம் சார்பில், ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த தடையால், சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பூங்காவில் உள்ள பல்வேறு பழங்கள் வடிவிலான இருக்கைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கோடை சீசன் அன்று பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்கேற்ப நடைபாதை, கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து தரப்படும் என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் நாளை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.